150 கி.மீ சைக்கிளில் சென்று வருங்கால மனைவிக்கு தாலி கட்டிய இளைஞர்

Update: 2022-11-07 02:42 GMT

கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர், சைக்கிளில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து கேரள பெண்ணை கரம்பிடித்தார்.

கோவை தொண்டா முத்தூர் அடுத்த கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூர்யா. 28வயதான இவர், குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும், ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் திருமணத்தை குருவாயூர் கோவிலில் நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் தனது திருமணத்திற்கு சிவசூர்யா கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று, தனது வருங்கால மனைவியை கரம்பிடித்தார்.

தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்