பல முறை தேர்வு எழுதி தோல்வி - விடா முயற்சியால் UPSC தேர்வில் டீக்கடைக்காரர் மகன் வெற்றி

Update: 2024-04-28 01:51 GMT

நெல்லை மாவட்டம் அம்பை அருகே கல்லிடைக்குறிச்சியில் டீக்கடைக்காரர் மகன் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்லிடைக்குறிச்சியில் டீக்கடை நடத்திவரும் வேல்முருகன் என்பவரது மூத்த மகன் பேச்சி, அண்மையில் வெளியான யுபிஎஸ்சி தேர்வில் 576-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். பேச்சி 12-ம் வகுப்பு வரை கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும், சென்னை அண்ணா பல்கலை.யில் கெமிக்கல் இன்ஜினியர் படிப்பு முடித்து யுபிஎஸ்சி தேர்விற்கு படித்துவந்துள்ளார்.

கடந்த 4 முறை தேர்வு எழுதி வெற்றி கிடைக்காத நிலையில், டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சிப் பெற்று நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்துவந்தார். பணியின் இடையே விடாமுயற்சியாக கடந்தாண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்.

டீக்கடை மட்டுமே வைத்து குழந்தைகளின் படிப்புக்காக சொந்த வீட்டையே விற்று வேல்முருகன் படிக்க வைத்துள்ளார். தற்போது தேர்வில் மகன் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது கனவு நிறைவேறிவிட்டதாகக் கூறி ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்