"சோதனை என்ற கபட நாடகம் அரங்கேற்றம்; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - அதிமுக தலைமை கடும் குற்றச்சாட்டு

சோதனை என்ற பெயரில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-09-16 12:32 GMT
இது தொடர்பாக இருவரும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, கே.சி.வீரமணி  மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு சோதனை என்ற கபட நாடகத்தை திமுக அரங்கேற்றி வருவதாகவும், மக்களின் எதிர்ப்பு உணர்வை, கசப்பான மன ஓட்டத்தை மாற்றுவதற்காக அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளும் பதிவு செய்யப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 120 நாட்களில் சோதனை என்ற பெயரில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும், இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அதிமுக என்றும் அடிபணிந்ததில்லை எனவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணை கொண்டு, எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்