தடை செய்த பிறகும் தொடர்ந்து விளையாட்டு - போலீசில் வசமாக சிக்கிய பப்ஜி மதன்

தடை செய்த பிறகும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி யூட்யூபில் நேரலையில் ஒளிபரப்பியதோடு, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக யூட்யூப் பிரபலம் ஒருவருக்கு சிக்கல் வலுத்துள்ளது...

Update: 2021-06-14 13:04 GMT
இளைஞர்கள் பலரையும் திசைமாற்றியதாக எழுந்த புகார்களின் பேரில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டது. ஆனாலும் கூட அதனை விபிஎன் முறையில் சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளார் யூட்யூப் பிரபலமான மதன் என்பவர்...ஆனாலும் கூட இந்த விவகாரத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.இப்போது பள்ளிகள் மீதான பாலியல் புகார்கள் வெளிவந்த நிலையில் தான் மதனின் லீலைகளும் வெளிவந்திருக்கிறது. தன்னுடைய யூட்யூப் சேனலில் பப்ஜி கேமை தேடி வரும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதால் இப்போது சிக்கியிருக்கிறார் மதன்... 18 ப்ளஸ் என்ற பெயரில் யூட்யூப் பக்கத்தை நடத்தி வரும் மதன், பப்ஜி கேமை விபிஎன் முறையில் பயன்படுத்தி அதை சிறுவர், சிறுமிகளை வைத்து விளையாட வைத்துள்ளார். கூட்டாக சேர்ந்து விளையாட வரும் சிறுமிகளிடம் தனியாக சாட் செய்து அதில் ஆபாசமான பேச்சுகளை பேசியதாக ஆதாரத்துடன் தகவல்கள் வெளியாகின. 
இவருடைய சேனலை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்த நிலையில் அதில் சிறுவர், சிறுமிகளும் ஏராளம்... அதிலும் 12 முதல் 20 வயது வரையிலான சிறுமிகள் உள்ள நிலையில் அவர்களிடம் ஆன்லைனில் அத்துமீறியதாக மதன் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. அதேநேரம் சிறுவர்களை கவர்வதற்காக பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாகவும் புகார்கள் உள்ளன. தன்னுடைய யூட்யூப் சேனலில் பப்ஜி கேம் விளையாடுவதால் கிடைக்கும் பணத்தை ஆதரவற்றோருக்கு அனுப்புவதாக  கூறிய மதன், அதை வைத்தே பலரிடமும் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மதன் மீதான புகார்கள் அடுக்கடுக்காக குவிந்து வந்த நிலையில் புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவிற்கும் புகார்கள் வந்தன. அதன்பேரில் மதனை ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த விவகாரத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வருகிறது.  ஆனாலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆனால் விபிஎன் முறையில் அவர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதால் அவர் எங்கிருந்து அதனை பயன்படுத்துகிறார் என்பதை கண்டறிவதில் குழப்பம் ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதோடு சிறுமிகளிடம் அத்துமீறியது, பணம் பறிப்பது என இருந்த மதன் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிவதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அவரின் யூட்யூப் பக்கத்தில் இருக்கும் பதிவுகள் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தந்த நிறுவனங்கள் இந்த பக்கங்களை முடக்க போலீசாரும் கடிதம் எழுதி உள்ளனர். சைபர் க்ரைம் போலீசார் களத்தில் இறங்கி விசாரிக்கும் பட்சத்தில் மதன் குறித்த முழுமையான விபரங்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்