முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை

கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-07-15 09:42 GMT
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கடந்த 50 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மருந்து இல்லாத நிலையில், 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், தமிழக அரசின் அனுமதியை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும்,  இந்த சோதனை முயற்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்கவும், மருத்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும், உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்