ஒசூரில் நாய்களுக்கு கல்லறை கட்டிய ஆங்கிலேய அதிகாரிகள்
ஒசூரில் மாவட்ட கால்நடைப் பண்ணையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளாக இருந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் வளர்த்த நாய்களுக்கு நிறுவிய கல்லறைகள் இன்றளவும் வரலாற்று சின்னங்களாக காட்சியளிக்கின்றது.
ஒசூர் அருகேயுள்ள மத்திகிரியில் 1641 ஏக்கர் பரப்பளவிலான மாவட்ட கால்நடைப் பண்ணை 1824 ஆம் ஆண்டு குதிரைகள் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத்துக்காக ஆங்கில அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பண்ணையாக விளங்கும் இந்த பண்ணையில் மாடு, கோழி, பன்றி, காளை, குதிரை உள்ளிட்ட 12
பிரிவுகளாக செயல்படுகிறது. அந்த காலத்தில் கால்நடைப்பண்ணையில் ஏராளமான ஆங்கிலேயர்கள் அதிகாரிகளாக பணியில் இருந்தனர்.
அப்போது, அவர்கள் செல்லப் பிராணிகளாக வளர்த்த நாய்களின் அன்பு மற்றும் விசுவாசத்தால் அவற்றுக்கு கல்லறைகளை கட்டியுள்ளனர். அதன்படி, 9 நாய்களின் கல்லறைகள் இந்த பண்ணை வளாகத்தில் உள்ளன. நாய்களின் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட விபரங்களும் கல்லறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லறைகள் 100 ஆண்டுகளை கடந்து இன்றளவும் நினைவு சின்னங்களாக நிற்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.