கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

Update: 2019-05-19 10:26 GMT
கடந்த வெள்ளிக்கிழமை தீபிகா தனது கணவர் ராஜாவும், மகன் பிரனீஷும் காணாமல் போனதாக கூறியிருந்தார். ஆனால், அவரே  தனது தாய் விஜயாவின் துணையுடன் இருவரையும் கொன்று அருகில் உள்ள ஏரிக்கரையோரம் புதைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழு முன்னிலையில், புதைத்த இடத்தை தோண்டி சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணையில் தீபிகா, தனது கணவர் ராஜா காதலிக்கும் போது நல்லவன் போல நடித்து விட்டு, தற்போது அதிகளவில் மது அருந்தி விட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் ராஜாவை கொன்றதாகவும் தெரிவித்தார். மேலும், கணவர் மற்றும் தனது செயலால் மகனுக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் குழந்தையையும் கொன்றதாக தெரிவித்தார்.  
 
இதனையடுத்து, போலீசார் தீபிகாவை ஆற்காடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் நண்பரான ஜெயராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஜெயராஜுடன் தீபிகாவுக்கு இருந்த கள்ளக்காதலுக்கு, இடையூறாக இருந்ததாலே இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஜெயராஜ் போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்