"தமிழகத்தில் அக்டோபர் 7-ல் அதிதீவிர கனமழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7 ஆம் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வரும் 7ஆம் தேதி வரை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமையன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வழக்கத்தை விட மிகுந்த சீற்றத்துடன் கடல் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
"சென்னையில் இடைவெளிவிட்டு மழை பெய்யும்" - பாலசந்திரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மழை பெய்யும் எனக் கூறினார்.
பல்வேறு இடங்களில் பரவலாக மழை :
சென்னையில் பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இரவிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. எழும்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, வடபழனி, கோயம்பேடு, திருவொற்றியூர், மணலி, வள்ளுவர்கோட்டம், மயிலாப்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது.