தெலங்கானாவில் தொடரும் ஆணவக் கொலைகள் - காதல் மனைவியின் கண் முன்னே கொல்லப்பட்ட பிரணய்
காதல் திருமணம் செய்து கொண்ட தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என ஏற்கனவே புகார் தெரிவித்தும், தெலங்கானா மாநிலத்தில் தொடரும் ஆணவக் கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்;
தெலங்கானா மாநிலம் மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த பிரணய், அம்ருதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு அம்ருதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பிரணய் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...
தங்கள் உறவினர்களால் மிரட்டப்படுகிறோம் என அம்ருதா கூறிய பிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே பிரணயின் மரணத்திற்கு முக்கிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது...
இதேபோல் தான் அனுராதாவின் விஷயத்திலும் நடந்திருக்கிறது. மஞ்சேரியல் மாவட்டம் கலமடுகு பகுதியை சேர்ந்த சாத்தையாவின் மகள் பிண்டி அனுராதா. இவர் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியரான அயோரி லட்சுமணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சொந்த ஊருக்கு வந்த அனுராதாவை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு இழுத்து சென்று அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மோசமான தாக்குதல் தொடர்ந்த நிலையில் அனுராதா உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை வயலுக்கு எடுத்துச் சென்று எரித்ததோடு, சாம்பல் மற்றும் எலும்புகளை கால்வாயில் கரைத்துள்ளனர்.
அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்ட சந்தீப் டிட்லா - மாதவி என்ற ஜோடியும் கொடூரமாக தாக்கப்பட்டனர். மாதவியின் தந்தை நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தெலங்கானா மாநிலத்தில் தொடரும் இதுபோன்ற ஆணவ கொலைகள், தாக்குதல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கே முன்வைக்கப்படுகிறது...