மேலும் ஒரு இந்தோனேசிய விமானம் மாயம்..! புறப்பட்ட 4 நிமிடத்தில் மாயமானது எப்படி?
மீண்டும் ஒரு விமானம் பயணிகளுடன் மாயமானதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் இந்தோனேசிய மக்கள்... என்ன நடந்தது இந்தோனேசியா விமானத்திற்கு...?
அந்த விமானத்தின் பெயர் ஸ்ரீவிஜயா ஏர் போயிங் 737 ...
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து தீவு நகரான போண்டியானாக்கிற்கு புறப்பட்ட அந்த விமானம் திடீரென மாயமானதாக தகவல் வெளியானது...
அதுவும் புறப்பட்ட நான்காவது நிமிடத்திலே விமானம் தொடர்பான ரேடார் சிக்னல் கிடைக்கவில்லை என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்...
இதை விட அசாத்தியமான மற்றொரு தகவல்... 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ஒரே நிமிடத்தில் 3 கிலோ மீட்டர் இறங்கியதாக ரேடார் சிக்னல் காட்டுகிறது...
இதை வைத்துபார்க்கும் போது, விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மின்னல் வெட்டியதை போல பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக விமானம் விழுந்து வெடித்துச்சிதறியதை பார்த்ததாக கூறுகின்றனர் அருகே இருக்கும் தீவை சேர்ந்த மக்கள்...
இதேபோல, கடலில் கப்பலில் பயணித்திருந்த சிலரும், விமானம் பயங்கர வேகத்தில் கடலில் விழுந்து நொறுங்கியதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
தகவல்களை பெற்று கொண்ட மீட்பு குழுவினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காலகட்டம் என்பதால், குறைவான பயணிகளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 விமான பயணிகள் உள்பட 62 பேர் விமானத்தில்s பயணித்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசிய விமானம் ஒன்று கடலில் விழுந்து 189 பேர் உயிரிழந்தனர்...
தீவுகளின் நாடான இந்தோனேசிய மக்கள், அருகே உள்ள தீவுகளுக்கோ, அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல, பெரும்பாலும் விமான போக்குவரத்தை நம்பியே உள்ளனர்.
அப்படியிருக்க இரண்டே ஆண்டிற்குள் மீண்டும் இப்படியொரு அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது, இந்தோனேசிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
Next Story