"கூட்டணி கட்சியும் ஜெயிக்கணும்" புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு

x

புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்க விழா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தனது ஆன்மீக குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் மற்றும் அழுக்கு சுவாமிகளுக்கு பூஜை செய்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய ரங்கசாமி, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிபெற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிட்டார். புதுச்சேரியில் உள்ள ஒரே நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க போட்டியிடுவது குறித்து ரங்கசாமியிடம் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா வலியுறுத்திய நிலையில், இக்கூட்டத்தில், கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டுமென ரங்கசாமி பேசியிருப்பதன் மூலம், பா.ஜ.க. போட்டியிடுவதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்