கணவருடன் பிரச்சனை.. கைக்குழந்தைகளோடு கிணற்றில் குதித்த தாய்.. அநியாயமாக பிரிந்த உயிர்கள்
குடும்ப பிரச்சினையில் இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், இரு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகேயுள்ள பீளமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணமாகிய நிலையில், 3 வயதில் தமிழ்யாழ்னி என்ற பெண் குழந்தையும், ஒரு வயதில் சாஜித் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், தனது இரண்டு குழந்தைகளுடன் வடதொரசலூர் ஏரிக்கரை அருகேயுள்ள கிணற்றில் சரண்யா குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இரு பச்சிளம் குழந்தைகளும் கிணற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சரண்யா மட்டும் நீச்சலடித்து கரையேறியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கரையேறிய சரண்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இது திட்டமிட்ட கொலையா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.