12 வயது மகனுக்கு சூடு வைத்த தாய் - கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கொடுமை

கடலூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு 12 வயதான மகனுக்கு தாயே கொடூரமாக சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
x
கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியை சேர்ந்தவர் சாந்தி தேவி.  இவர், தனது 12 வயது மகனை அடிக்கடி சூடு வைத்து கொடுமைப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது சிறுவனின் உடலெங்கும் தீக்காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சாந்தி தேவியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த  போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சாந்தி தேவி, அதே பகுதியை சேர்ந்த சுனைது முகமது என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒன்றாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். அப்போது சாந்தி தேவி, தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு தன் மகனை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

மகனின் உடலில் சூடு வைத்து அதை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரசித்து வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். உடனடியாக போலீசார் சுனைது முகமதுவையும் அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளும் சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஓராண்டுக்கும் மேலாக தாய் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், இதற்கு அவரின் கள்ளக்காதலனும் உடந்தை என சிறுவன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சாந்தி தேவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் சுனைது முகமதுவை கைது செய்தனர்.  உடலில் தீக்காயங்களுடன் இருந்த சிறுவனை கடலூர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரத்தை சேர்ந்த துளசி என்ற பெண், தன் குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் துளசி மற்றும் அவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். இதற்கு அடுத்த சம்பவமாக குடியாத்தத்திலும் 2 சிறுவர்கள் வளர்ப்பு தாயால் கொடுமைக்கு ஆளாகினர். சிறுவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இப்போது கடலூரிலும் அதே பாணியிலான சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

Next Story

மேலும் செய்திகள்