இன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நீட்தேர்வை, கொரோனா பாதிப்பு குறைந்த பின் நடத்தலாம் என கோரிக்கை வைப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
சாத்தான்குளம் சம்பவம் - 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனு - இன்று விசாரணை
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது இன்று காலை 11 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்த மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அந்த 5 பேரையும் நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் - உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மனு மீது இன்று விசாரணை
சாத்தான்குளம் வழக்கில், சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இந்நிலையில், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை, நீதிபதி செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி, புதிய எஸ்.பி ஆகியோர் இன்று பதவி ஏற்பு - அலுவலகம் அமைக்கும் பணி தீவிரம்
மயிலாடுதுறை மாவட்டத்துக்கான சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி, புதிய எஸ்.பி ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பொறுப்பேற்க உள்ள நிலையில், அலுவலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விகாஸ் துபே என்கவுன்டர் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
உத்தர பிரதேசத்தில், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபே வின் மரணம் தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டுமென கோரி தொடரப்பட்ட பல்வேறு பொதுநல மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது
லடாக் எல்லை விவகாரம் - இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை
இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. லடாக் எல்லையில் படை குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம், கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், எல்லையில் இருந்து சீன ராணுவம் வாபஸ் பெற்றது. இந்தநிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
பெங்களூரில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அனைத்து மாவட்ட ஆட்சியருடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மாவட்ட நிர்வாகம் அங்கு உள்ள நிலைமையை பொறுத்து முடிவுகளை எடுத்து கொள்ளலாம் என எடியூரப்பா அறிவுறுத்தி உள்ளார்.
Next Story