தலை துண்டித்து இளைஞர் படுகொலை - கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

ஈரோட்டில் இளைஞர் ஒருவர் தலை வேறு, உடல் வேறாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலை துண்டித்து இளைஞர் படுகொலை - கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
x
ஈரோடு சூளை நெசவாளர் காலனி லட்சுமி நகர்  ஓடை பாலத்தில் நள்ளிரவில் இளைஞரின் தலை ஒன்று கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.  உடனே கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தலையை மீட்டனர். பின்னர் உடல் எங்கே என தேடிய போது அரை கிலோ மீட்டர் உள்ள ஓடை கரையோரத்தில் இருந்து சடலமும் மீட்கப்பட்டது. 

படுகொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எதற்காக இந்த கொடூர கொலை என விசாரிக்கும் பணியில் போலீசார் சுறுசுறுப்பாகினர். இளைஞரை அந்த இடத்திற்கு அழைத்து வந்த கும்பல், மரக்கட்டையால் அடித்து பின்னர் கொடூரமாக கழுத்தை அறுத்து பின்னர் தலையை மட்டும் தனியாக ஓடைப்பாலத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர். 

எந்தவித அரவமும் இன்றி அமைதியாக இருக்கும் பகுதியில் நிதானமாக கொலையை செய்த அந்த கும்பல் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படும் நிலையில் கொலையானவர் சேலம் மாவட்டம் பிச்சம்பட்டியை சேர்ந்த பிரித்விராஜ் என தெரியவந்தது. 

மில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பிருத்விராஜை கொடூரமாக கொலை செய்தது யார்? என போலீசார் தேடி வருகின்றனர். சினிமா காட்சிகளில் பார்ப்பது போல இந்த கொலை நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்