ரூ.8,000 பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியிடம் மோசடி : ரூ.2,300 வாங்கி கொண்டு தலைமறைவான டிப்டாப் ஆசாமிக்கு வலை

திருச்சி மாவட்டத்தில் தனியாக இருக்கும் வயதானவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் டிப்டாப் ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரூ.8,000 பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியிடம் மோசடி : ரூ.2,300 வாங்கி கொண்டு தலைமறைவான டிப்டாப் ஆசாமிக்கு வலை
x
திருச்சி உக்கடை அரியமங்கலம் தீப்பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்த 70 வயதான சபுரா பேகம், கணவரை இழந்த  நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். 

முதியோர் உதவி தொகைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில்,  சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு வந்த  ஒருவர், முதியோர் உதவிதொகையாக 8 ஆயிரம் ரூபாய்  வந்துள்ளதாக கூறியுள்ளார். 

ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள் அதனை சரி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஆவணங்களை பார்த்த டிப்டாப் ஆசாமி, மூதாட்டியிடம் தான்  கொடுத்த துண்டு சீட்டை காண்பித்து  8 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். 

இந்த பணிக்காக  மூதாட்டியிடம் இருந்து 2 ஆயிரத்து 300 ரூபாயை அந்த பிப்டாப் ஆசாமி பெற்றுச் சென்றுள்ளார். ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி,  கடை மூடி இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து கண்ணீர் வடித்துள்ளார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.  

சமயபுரம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட முதியவர்களிடம் இதே பாணியில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தனிமையில் வசிக்கும் முதியவர்களின் இயலாமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி பணம் பறிக்கும் இது போன்ற டிப்டாப் ஆசாமிகள் மீது  போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்