பாஸ்ட் டேக் என்றால் என்ன..?

டிசம்பர் 1ஆம்தேதி முதல் பாஸ்ட் டேக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்ட் டேக் என்றால் என்ன?
பாஸ்ட் டேக் என்றால் என்ன..?
x
சுங்கச் சாவடிகளில் வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பதை தவிர்க்கும் வகையிலான திட்டம் தான் பாஸ்ட் டேக். தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கொண்டு வரப்படும் இந்த திட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகள் எளிதாக தங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த முடியும். தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் என்றழைக்கப்படும் பாஸ்ட் டேக் திட்டமானது வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து கொள்வோர் எந்த ஒரு சுங்கச் சாவடியிலும் வரிசையில் காத்து நின்று பணம் கட்ட தேவையில்லை. 

பாஸ்ட் டேக் திட்டத்தின் கீழ் வாகனத்தின் விபரம், உரிமையாளர் பெயர், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பான் கார்டு  உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் பதிவேற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்குடன் பாஸ்ட் டேக் கார்டை இணைத்துக் கொண்டால் பணம் தானாக வசூலிக்கப்படும்.  இதற்காக 22 வங்கிகளுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 

பாஸ்ட் டேக் முறையில் இணைந்தோருக்காக சுங்கச்சாவடியில் பிரத்யேக வழியும் உருவாக்கப்படும். இதனை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் விரைவாக செல்ல முடியும். வாகனத்தின் கண்ணாடியில் பாஸ்ட் டேக் கார்டை பொருத்தினால் போதும். வாகனமானது சுங்கச் சாவடியை கடக்கும் போது அடையாளத்தை தானாக கண்டறிந்து பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும். 

இதனால் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் பல மணி நேரம் காத்து நிற்கும் நிலை இனி இருக்காது என்பதால் இதனை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் ஜெய்ப்பூர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஸ்ட் டேக் முறையை வீடு வீடாக கொண்டு சேர்க்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. சுங்கச் சாவடிகள் மற்றும் இணையதளத்தில் உரிய தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம் பாஸ்ட் டேக் முறையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வாகன ஓட்டிகள் காத்து நிற்காமல் தங்கள் பயணத்தை விரைவாக தொடர முடியும். 

Next Story

மேலும் செய்திகள்