தமிழக ரயில்வே பணிகளில் தமிழரல்லாதவர் நியமனம் : தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவு
தமிழக ரயில்வே பணிகளில் முக்கிய பொறுப்புகளுக்கு தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதிக்கக்கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில்வே பாதையில் கடந்த 8 ஆம் தேதி ஒரே ரயில் பாதையில் எதிரெதிரே ரயில்கள் வந்த சம்பவத்தில் பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக ரயில்வே பணியாளரின் மொழிப் பிரச்சினை இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த மணவாளன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் ரயில் நிலைய பொறுப்பாளர், ரயில் எஞ்சின் ஓட்டுநர், பாயிண்ட் மேன், கார்டு உள்ளிட்ட பணிகளில் இருப்போருக்கு பெரும்பாலும் தமிழ்மொழி தெரிவதில்லை, அதனால் ரயில் விபத்து நிகழ காரணமாக அமைவதால், தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து, தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story