கருக்கலைப்பு சிகிச்சை அளித்த ஆயுர்வேத பெண் மருத்துவர் - பெண் உயிரிழந்ததால் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே ஆயுர்வேத பெண் மருத்துவர் மேற்கொண்ட கருக்கலைப்பு முயற்சியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருக்கலைப்பு சிகிச்சை அளித்த ஆயுர்வேத பெண் மருத்துவர் - பெண் உயிரிழந்ததால் பரபரப்பு
x
பொள்ளாச்சி அருகே மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு வனிதாமணி என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் வனிதாமணி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஏற்கனவே 5 பிள்ளைகள் இருப்பதால், குழந்தையை கலைக்க தம்பதியினர் முடிவு செய்தனர். அரசு மருத்துவமனை சென்றால் திட்டுவார்கள் என நினைத்து கணவன் -மனைவி இருவரும் 28-ந்தேதி வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியிடம் கருச்சிதைவு செய்ய போன் மூலமாக அணுகி உள்ளனர். இதையடுத்து மருத்துவர் முத்துலட்சுமி அவரது மகன் கார்த்திக் இருவரும் காரில் வனிதாமணி வீட்டுக்கு சென்று அவருக்கு ஊசி போட்டுவிட்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு வடசித்தூரில் உள்ள தனது கிளினிக்கில் வைத்து மருத்துவர் முத்துலட்சுமி வனிதாமணிக்கு கருக்கலைப்பு சிகிச்சையை ஆரம்பித்தபோது  வனிதாமணி உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக வனிதாமணியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு முத்துலட்சுமி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வனிதாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வனிதாமணி மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமி அவரது மகன் கார்த்தி ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்