மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்; பாஜக மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குறியது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் 30 இருந்து 33-ஆக உயர்த்தி - மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குறியது என்றும் துரைமுருகன் அதில் குறிப்பிட்டுள்ளார். புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை நியமன எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து - கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளில் பா.ஜ.க. கவனம் செலுத்திட வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
Next Story