கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு - பெங்களூரில் சிக்கினார், தங்க ராணி ஸ்வப்னா

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 3 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். தங்க ராணி சிக்கியது எப்படி என பார்க்கலாம்...
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு - பெங்களூரில் சிக்கினார், தங்க ராணி ஸ்வப்னா
x
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் பாசில் ஃபரீத் ஆகியோருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

ஷரீத் கைதான நிலையில் ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவானார்கள். மேலும் முன் ஜாமீன் கேட்டு சொப்னா சுரேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருவதால் அந்த நீதிமன்றத்தில் ஜாமீன் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தியிருந்தது. கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் மற்றொருவரையும் பெங்களூரில் கோரமங்களத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுதிந்திரா ராய் என்பவருக்கு சொந்தமான வீட்டில்  வைத்து நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வீட்டில் ஸ்வப்னாவின் கணவர் மற்றும் குழந்தைகளும் இருந்துள்ளனர். இதற்கிடையே  திருவனந்தபுரத்தில் உள்ள சிவசங்கர்  குடியிருந்த அப்பார்ட்மண்டில் சுங்கத்துறையினர் பரிசோதனை நடத்தினர். இதேபோல் திருவனந்தபுரத்தில் உள்ள சந்தீப் நாயரின் அருவிகாரா வாடகை வீட்டில்  சுங்கத்துறையினர்  பரிசோதனை நடத்தினர். அப்பொழுது  சந்தீப் நாயரின் தம்பி  மற்றும் தாயார் இருந்துள்ளனர். அப்பொழுது சந்தீப் நாயர் தனது தம்பி ஷோருப்புக்கு தொலைபேசியில்  அழைத்துள்ளார். அப்போது, தான் மறைந்திருக்கும் இடத்தை  சந்தீப் நாயர் தெரிவித்ததுள்ளார். இந்த போன் அழைப்பை வைத்து என்ஐஏ  அதிகாரிகள், இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பெங்களூர் விரைந்து அவர்கள் பிடித்தனர். இந்நிலையில் கைதான 3 பேரும் இன்று கொச்சிக்கு அழைத்து வரப்படுகின்றனர். 

இவர்களை கொச்சி தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் விசாரணைக்கு சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இதற்கிடையே  சந்தீப் நாயர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  தங்க கடத்தலுக்கு பயன்படுத்திய பைகள் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஷரித்தை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஐஏ கமிஷனர் செளகாத் அலி தலைமையிலான அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை  நடத்தினர். இதில் பாசில் ஃபரீத் பற்றியும் கடத்தல் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் துறைமுகம் வழியாகவும் தங்க கடத்தல் நடைபெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்