30 கிலோ தங்கம் கடத்தல் - முதல்வரின் செயலருக்கு தொடர்பா?
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கக் கடத்தல் விவகாரத்தில், யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்றும், சிபிஐ விசாரணை குறித்து மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அமீரக தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து இந்த பறிமுதல் நடைபெற்றது. இது தொடர்பாக, கேரள தகவல் தொடர்பு துறை மேலாளர் ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தப்பியோடிய ஸ்வப்னாவை தேடி வருகின்றனர். ஏற்கனவே அமீரக தூதரகத்தில் பணியாற்றிய அவர், அண்மையில், தகவல் தொடர்புத் துறை மேலாளராக பணிக்கு வந்துள்ளார். பினராயி விஜயனின் தலைமைச் செயலாளர் சிவசங்கர், தகவல் தொடர்பு துறைக்கும் செயலாளர் என்பதால், முதலமைச்சருக்கும் தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனிடையே, ஸ்வப்னா நியமனத்துக்கும், அரசுக்கும் தொடர்பில்லை என்றும், ஒப்பந்த அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் அலுவலகம், விரிவான விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. விமான நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கடத்தல் குறித்தும், விசாரணை குறித்தும் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் யாரையும் காப்பாற்ற மாநில அரசு முயற்சிக்கவில்லை எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story