ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.
x
மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அனுமதிக்கலாம், ஆனால், மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு தி.மு.க., அதி.மு.க., பா.ம.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். அதன்படி, மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரக உதவி தலைமை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் வகுத்த திட்டத்தின் அடிப்படையில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுவதாக மத்திய அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாநில அளவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அனுமதிக்கலாம் என திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது வழக்கு தொடர்ந்துள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே, தற்போதைய நடைமுறையை பின்பற்றியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளும்படி, மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும், வரும் திங்கள் கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்