அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 26-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்கான அனைத்து மின்னணு ஆதாரங்களும் அமலாக்கத்துறையிடம் உள்ளதாக தெரிவித்தார். போலி நிறுவனங்களை உருவாக்கியவர்கள் சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் 10 சொத்துகள், 17 வங்கி கணக்குகளை இதுவரை கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் காவலில் வைத்து விசாரிக்காமல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலுள்ள கூட்டுச் சதியை கண்டறிய முடியாது என்றும்  துஷார் மேத்தா வாதிட்டார்.வாதங்களை கேட்ட நீதிபதிகள்,ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை  கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்