"வேட்பாளரின் மருத்துவ அறிக்கையை கேட்டு வற்புறுத்த முடியாது" - உயர்நீதிமன்றம் கருத்து

x

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கேட்டு வற்புறுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், வேட்பாளர்களின் உடல் நிலை குறித்த பரிசோதனை அறிக்கை என்பது, அந்தரங்க விஷயம் என்பதால் அவற்றை கேட்க முடியாது என்று விளக்கமளித்தார். மேலும், மருத்துவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், மருத்துவக் காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களிடம் கேட்டு ஏன் வலியுறுத்தக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மேற்கோள் காட்டும் தீர்ப்பு நகல்களை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்