சொந்த ஊர் வந்ததும் சுயரூபத்தை காட்டிய கணவன்.. மனைவி விபரீத முடிவு - கொந்தளித்த உறவினர்கள்

x

திருக்கோவிலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை மறித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் காட்டுச் சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் குஷ்பூ. இவர் பெங்களூருவில் வீட்டு வேலை செய்து வந்த போது, அதே பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்த ஆறுமுகம் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தை இருவரின் குடும்பத்தாரும் ஏற்க மறுத்த நிலையில், இருவரும் பெங்களூருவிலே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆறுமுகத்தின் தாயார் உடல்நலக் குறைவால் இறந்து விட, இருவரும் ஆறுமுகத்தின் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் சிவனார்த்தாங்கள் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென ஆறுமுகம் வேலைக்கு செல்லாமலும், மது போதையில் அடிக்கடி குஷ்பூவை தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் 2 நாள்கள் முன்பு குஷ்பூ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குஷ்பூவின் உடலை வாங்க மறுத்து கணவரின் உறவினர்கள் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குஷ்பூவின் உறவினர்கள் திருக்கோவிலூர் அருகே உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்