போலீஸ் எனக்கூறி இளம்பெண்ணை கடத்திய மர்மநபர்... பெண்ணை பத்திரமாக மீட்ட காவல்துறை

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, போலீஸ் எனக்கூறி, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து கடத்திச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த ரோபாஸ்டன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இருவரும் ஊட்டிக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பல்லடம் அருகே அவர்களது இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வழிமறித்துள்ளார். அப்போது தன்னை போலீஸ் அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், சந்தேகமாக இருப்பதாகக் கூறி, ரோபாஸ்டனை தனியாக சற்று தூரம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் பெண்ணை விசாரிக்க வேண்டும் எனக்கூறி, ரோபோஸ்டனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு வந்துள்ளார். சந்தேகம் அடைந்த ரோபாஸ்டன் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு காதலியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் செல்போன் எண்ணை வைத்து தேடியபோது, இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறியதால், அவருடன் சென்றதாக தெரிவித்தார். இளம்பெண்ணை கடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்