உயிருக்கு பயந்து விட்டு ஓடிய ஆண் நண்பர்...தோழியை விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர் - இறுதியில் அவனுக்கே சாவு பயம் காட்டிய மக்கள்

x

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், காதலை ஏற்காத 19 வயது பெண்ணை, இளைஞர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற பரபரப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

புனேவின் கொய்தா பகுதியில் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை, இளைஞர் ஒருவர் வழிமறித்துள்ளார்.

இளைஞர் குறுக்கே வந்த கோபத்தில், இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஆண் நண்பர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கொண்டு வந்த பையில், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் சரமாரியாக அந்த இளைஞர் தாக்க முயன்றார். அப்போது அரிவாள் வைத்திருந்ததால், தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஆண் நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து தப்பியோடிய பெண்ணை, அந்த இளைஞர் வெறித்தனமாக விரட்டிச் சென்று, அரிவாளால் தாக்கினார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனிடையே, ஓட முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணை, அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும், இளைஞர் அரிவாளை காட்டி வெறித்தனமாக நடந்துகொண்டதால், பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமான இளைஞரை பிடித்த பொதுமக்கள், போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த பெண், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதலில் மயிரிழையில் அந்த இளம்பெண் உயிர் தப்பினார் என்பதே ஆச்சரியம்... பதை பதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்தது.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சாந்தனு லட்சுமணன் என தெரியவந்தது. ஆக்ரோஷமாக கொலை செய்யக் காரணம் குறித்து கேட்டபோது, போலீசாருக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது.

பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர், அந்தப் பெண் காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முயன்றது அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து, சாந்தனு லட்சுமணனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்