காதல் திருமணம் செய்த மகள்.. ஊர் பழிக்கு பயந்த பெற்றோர் விபரீத முடிவு

x

கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளின் முடிவால் விரக்தி.. ஊர் என்ன சொல்லுமோ என்ற பயத்தில் ஒரு தம்பதி அடுத்தடுத்து உயிரை விட்ட சம்பவம் தூத்துக்குடி அருகே அரங்கேறி இருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகே உள்ள செட்டிமல்லன்பட்டி வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரின் மனைவி சங்கரம்மாள். விவசாயத்தை பின்னணியாக குடும்பம் இவர்களுடையது. இவர்களின் மகள் பேச்சியம்மாள் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். மகன் பாண்டித்துரை ப்ளஸ் 1 வரை படித்துள்ளார். இதனிடையே கல்லூரிக்கு சென்று வந்த பேச்சியம்மான், டிரைவரான காளிமுத்து என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.ஆனால் காதலில் உறுதியாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தனர். இதன்படி திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்து வெளியேறிய பேச்சியம்மாள், தன் காதலன் காளிமுத்துவை திருமணம் செய்து கொண்டார்.மகளின் இந்த முடிவு குறித்து சின்னத்துரை மற்றும் சங்கரம்மாளுக்கு தெரியவரவே அதிர்ந்து போயினர். இருவரும் சோகத்தில் மூழ்கிய நிலையில் வீடே மயான அமைதியாக காட்சி தந்தது.அப்போது வீட்டில் தனியாக இருந்த சங்கரம்மாள், புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரின் கணவரை வீட்டில் காணவில்லை. மனைவி இறந்தது குறித்து அவரிடம் சொல்ல வேண்டும் என உறவினர்கள் சின்னத்துரைக்கு போன் செய்த போது அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை..அப்போது சாயர்புரம் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்தார் சின்னத்துரை. இவரின் மரணமும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஆசையாக வளர்த்த மகள் தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்த கவலை ஒரு பக்கம், மகளின் திருமணத்தால் ஊரில் பிரச்சினை ஏற்படும் என்ற பயம் மறுபக்கம் என இருந்த சூழலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை கண்டறிவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்