கணவர் இறந்த பின் கர்ப்பம்.. யார் காரணம்?... கடைசி வரை வாயே திறக்காத பெண் - பிரசவ வார்டுக்குள் நுழையும்போது அவிழ்ந்த மர்மம்

x

அரியலூர் அருகே கணவர் உயிரிழந்து 5 வருடங்கள் கழித்து, திடீரென கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற பெண்ணிடம், குழந்தைக்கு தந்தை யார் ? எனக் கேட்டு உறவினர்கள் கொடுத்த மன உளைச்சல், பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.....

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 27 வயதான இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மேல் திரு தத்தூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது...

திருமணமான முதல் வருடத்திலே இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்...

இதன்பிறகு சில மாதங்களிலே ராஜேஸ்வரியின் கணவர் கொளஞ்சி உயிரிழந்த நிலையில், திருப்பூர், கோயம்புத்தூர், பல்லடம் என பல இடங்களில் தங்கி அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்திருக்கிறார் ராஜேஸ்வரி...

இறுதியாக, பல்லடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த போது, ராஜேஸ்வரி கர்ப்பம் தரித்திருக்கிறார்... இதற்கு அப்பகுதியில் உள்ள ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவுதான் காரணம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து ராஜேஸ்வரி வாயே திறக்கவில்லை...

இதையடுத்து, நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரி தனது பிரசவ நாள் நெருங்கி கொண்டிருந்ததால் சொந்த ஊருக்கே திரும்பி தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில்... பிரசவத்திற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்...

அங்கு சிகிச்சைக்கான விண்ணப்ப படிவத்தில், கணவரின் பெயரில் தனது சகோதரியின் கணவரின் பெயரை பூர்த்தி செய்து பிரசவ வார்டினுள் சென்றிருக்கிறார் ராஜேஸ்வரி...

சிகிச்சையில் ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், உறவினர்கள் முதற்கொண்டு, அக்கம்பக்கத்தினர் என அனைவரும் குழந்தையின் தந்தை யார் என கேட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்...

இதனால், அவர் தனியே வெளியே சென்றாலும், செல்போன் பேசினாலும் தொடர்ந்து சந்தேக கேள்விகளால் துளைத்தும், குழந்தையின் தந்தை குறித்து சொல்லும் படியும் உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர்...

கடைசி வரை குழந்தையின் தந்தை குறித்து ராஜேஸ்வரி வாய் திறக்காததால், ஆத்திரத்தில் அவரை தவறாகவும், இழிவாகவும் உறவினர்கள் பேசி வந்ததாக கூறப்படுகிறது...

இதனால், கடும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளான ராஜேஸ்வரி தனது 4 மாத ஆண் குழந்தையை வீட்டின் அருகேயிருந்த முந்திரி தோப்பின் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றும், அங்குள்ள மரத்தில் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இதை அந்த வழியாக சென்ற பகுதி மக்கள் கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்... தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட குழந்தை மற்றும் தற்கொலை செய்த தாயின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்