வளர்ப்பு நாயால் வெடித்த பிரச்சினை - தட்டி கேட்டவருக்கு கத்திரிக்கோலால் சரமாரி குத்து

வளர்ப்பு நாயால் வெடித்த பிரச்சினை - தட்டி கேட்டவருக்கு கத்திரிக்கோலால் சரமாரி குத்து
x

வளர்ப்பு நாய் குரைப்பதை தொல்லை என சொன்ன இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறி இருக்கிறது.


காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரின் மனைவி அமுதா. இவர்களுக்கு சவுமியா மற்றும் சரண்சிங் என 2 பிள்ளைகள். அமுதா குடும்பத்தினர் உணவகம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் சரண்சிங் கைகளில் டாட்டூ போடும் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார்.இவர்களின் பக்கத்து வீட்டில் சித்ரா என்ற பெண் விஷ்ணு மற்றும் சிவா என 2 மகன்களோடு வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர். நேரம் காலம் பார்க்காமல் நாய் குரைத்து வந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொல்லையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அமுதா குடும்பத்தினர், சித்ராவிடம் சென்று நாயை வேறு இடத்தில் கட்டி வைக்குமாறு கூறி உள்ளனர்.

எங்கள் வீட்டு நாயை நீங்கள் சொல்லும் இடத்தில் கட்டி வைக்க முடியாது என அவர்கள் கூறவே, இருதரப்புக்கும் இடையே பிரச்சினை வெடித்துள்ளது.இதனால் சித்ராவின் மகன்கள் 2 பேரும் அமுதா குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். சம்பவத்தன்று உணவகத்தை மூடிவிட்டு வந்த அறிவழகன், அமுதா மற்றும் சரண்சிங் ஆகிய 3 பேர் மீதும் சித்ராவின் மகன்களான விஷ்ணு மற்றும் சிவா ஆகியோர் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் கஞ்சா மற்றும் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தாங்கள் கைகளில் வைத்திருந்த கத்திரிக்கோல் மற்றும் திருப்புளி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து அவர்கள் கொடூரமாக தாக்கியதில் அமுதா மற்றும் அவரது மகன் சரண்சிங் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்சிங் சிகிச்சை பலனின்றி பலியானார். அதேநேரம் அவரின் தாய் அமுதா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதேநேரம் அமுதா குடும்பத்தினர் தங்கள் மகன்களை தாக்கியதாக கூறி சித்ரா தன் 2 மகன்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து நாடகமாடி உள்ளார். இதையறிந்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்