இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..வந்தாச்சு வெடிக்காத சிலிண்டர்..

x

நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு 'இன்டேன்' என்ற பெயரில் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது. நடைமுறையில் உள்ள சிலிண்டர்கள் அனைத்தும் எடை அதிகமானதாகவும் பயன்படுத்திய சில மாதங்களில் துரு பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம்போசிட்' சிலிண்டரை கடந்த 2021 ல் அறிமுகம் செய்தது . தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் இந்த சிலிண்டரின் பயன்பாடு குறைவாகவே இருந்து வருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த சிலிண்டர் பாலிமர் ஃபைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித் தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவானது. எனவே, பெண்கள் இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அத்துடன், இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது

இந்த சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்பு வைப்புத் தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும் எனவும் பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத் தொகை, புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை செலுத்தினால் போதுமானது. மேலும், புதிய சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய 86556 77255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருந்தது . கூடுதல் வைப்பு தொகை செலுத்த வேண்டிய காரணத்தால் பாதுகாப்பு நிறைந்த இந்த வகையில் சிலிண்டரை வாங்குவதில் பொதுமக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதனிடையே நுகர்வோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியன் ஆயில் டீலர்கள் வாயிலாக வலியுறுத்தி வருகிறது.

சென்னை, கோயம்புத்தூர்,திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், பெங்களூரு, அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், , புவனேஸ்வர், சண்டிகர், டார்ஜிலிங், டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், லூதியானா, மைசூர், பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, சூரத், , தும்கூர், வாரணாசி மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட நாட்டின் 28 நகரங்களில் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த வகை சிலிண்டர்கள் விற்பனையை நாடு முழுவதும் தீவிர படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முயற்சித்து வருகிறது இந்தியன் ஆயில் காஸ் ஏஜன்சிகள், புதிய சிலிண்டர் குறித்து, தொலைபேசி வழியாக பேசிய, வாடிக்கையாளர்களிடம் இதன் முக்கியத்துவம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது , ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் கூடுதலாக, 1,150 ரூபாய் செலுத்தி, புதிய சிலிண்டருக்கு மாற வலியுறுத்தப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்