"என்னையா திட்ற.. இப்போ பேசு.." டீக்கடையில் வெட்டி கதை, புறணி பேச்சு - மைக் செட் போட்டு 'பூமர்களை' பொளந்துகட்டிய நபர்... இது வேற லெவல் ரிவென்ஜ்..!

x

கேரளாவில் தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மைக் செட்டை வாடகைக்கு எடுத்து, மைக்கில் ஊர் அதிர அவதூறு பேசியவர்களை திட்டி தீர்த்த நபர் இணையத்தில் வைரலாகி இருக்கிறார்...

அமைதிப்படை படத்துல நடிகர் மணிவண்ணன் மேடை போட்டு திட்டி தீர்க்குற சீன்ல தியேட்டர்ல விசில் பறந்திருக்கும்....

ஆனா கேரளாவுல ஒருத்தரு தன்னை பத்தி பொறணி பேசுனவங்களுக்கு கொடுத்த பதிலடி தான் தரமான சம்பவம்....

வெளிநாட்டுல இருந்து ஒருத்தரு சொந்த ஊருக்கு வந்தா அவர் கொடுக்குற சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டு கம்முனு இருக்கணும். இல்லன்னா துபாய்ல ஒட்டகப்பால் எவ்ளோனு கேட்டுட்டு போயிடணும்.. ஆனா அவரை பத்தி வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளி விட்டா அந்த மனுஷனால எவ்ளோ தான் தாங்க முடியும்?

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்துல உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவரு தான் ஜான் ரவி.. வெளிநாட்டுல போய் வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்த்து வச்சு சொந்த ஊருக்கு வந்து வீடு கட்டுற வேலையை பார்த்துட்டு வந்துருக்காரு..

பக்கத்து வீட்டுக்காரன் ஒரு குக்கர் வாங்குனாலே குமுறிப்போற நம்ம ஆளுங்க வீடு கட்டுனா சும்மா விடுவாங்களா? ஜான் ரவியை பத்தியும் அவர் வேலையை பத்தியும் பொறணி பேச ஆரம்பிச்சுட்டாங்க...

அவங்க பேசுனது அவங்களுக்குள்ளே இருந்திருந்தா கூட பரவாயில்லை. ஜான் ரவி காதுல விழுற அளவுக்கு பொறணி பேசுனது தான் சோகம்..

போனா போகுதுன்னு ஒரு நாள் பொறுத்தாரு.. பத்து நாள் பொறுத்தாரு ஜான் ரவி. ஆனா இதுக்கு மேல முடியாது பொங்கியெழுந்த அவரு, நேரா போய் நின்னது மைக் செட் வாடகைக்கு விடுற கடை முன்னாடி தான்...

எந்த கடை முன்னாடி உட்கார்ந்து தன்னை பத்தி அவதூறா பேசுனாங்களோ அந்த கடை முன்னாடி போய் நின்ன ஜான்ரவி, திட்டி ​தீர்த்ததெல்லாம் இதுவரை வரலாறு பார்க்காத சம்பவம்..

மனசுல இருக்குற பாரத்தை எல்லாம் இறக்கி வச்ச மாதிரி ஒரு ஃபீல் வர்ற வரைக்கும் மணிக் கணக்குல திட்டி தீர்த்தாரு ஜான் ரவி...

இந்த வீடியோ காட்சிகள் இணையத்துல பரவிய நிலையில பொது இடங்கள்ல தகாத வார்த்தைகளால பேசுனதால ஜான் ரவி மீது காயங்களும் போலீசார் வழக்குப்பதிவு செஞ்சு அவர் வச்சுருந்த மைக் செட்டையும் பறிமுதல் பண்ணியிருக்காங்க...

கேஸ் போட்டா போட்டுட்டு போகட்டும்... ஆனா என்னை பத்தி பேசுனவங்களை திட்டுனதுல மனசுல இருந்த பாரமெல்லாம் இறங்கிடுச்சுப்பான்னு மனுஷன் நிம்மதி பெருமூச்சு விடுறாராம்... இந்த மாதிரி அவதூறா பேசுறாங்களுக்கு பதிலடி கொடுத்ததுல இனி நிம்மதியா தூங்குவேன்னும் சொல்லியிருக்காரு ஜான் ரவி..

அடுத்தவன் நம்மளை பத்தி என்ன பேசுவான்னு யோசிச்சு பயந்து பயந்து வாழற வாழ்க்கை வட்டத்துல சிக்கியிருக்குற நாம, இனி மைக்கோட இப்படி கிளம்புனா, பேசுறவங்க நிலைமை எல்லாம் சிக்கல் தான்...


Next Story

மேலும் செய்திகள்