ஜாமினில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை... மச்சான் கொலைக்கு காத்திருந்து பழிதீர்த்த மாமன்...

x

இருளை உறங்கவிடாமல் அகரம் பகுதியை சுழன்றடித்து கொண்டிருந்தது காவல்துறை.

நள்ளிரவில் இப்படி ஊரே அச்சத்தில் அதிர்ந்து கிடக்க காரணம் சற்று முன் நடந்த ஒரு படுகொலை.

முகம் சிதைத்து ரத்தம் பீய்ச்சி அடிக்க சாலையிலேயே கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார் ஒரு இளைஞர்.

கொல்லப்பட்டவர் இதே ஊரைச்சேர்ந்த அஜித்குமார். 24 வயதான இவர் ஒரு கொலை குற்றவாளி. கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அஜித்குமார் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். சென்னையிலேயே தங்கி இருந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று இரவு, 8 மணியளவில் நண்பர் ஒருவருடன் மாரமங்கலத்தில் இருந்து அகரம் நோக்கி வந்திருக்கிறார். அப்போது பைக்கை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் அஜித்குமாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கிறது.

ரத்த வெள்ளத்தில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயிருக்கிறார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

அப்போது தான் அஜித்குமாரின் பழைய பகை, காத்திருந்து கருவறுத்த கதை தெரிய வந்திருக்கிறது.

ஆம்.... கடந்த சில ஆண்டுகளாக அஜித்குமார், சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

அதே நிறுவனத்தில் ஏரல் அடுத்த கோவங்காடு பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரும் வேலை செய்திருக்கிறார்.

ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நட்பாக பழகி உள்ளனர். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் அஜித்குமார், சரவணகுமாரை அடித்து தாக்கி இருக்கிறார்.

அந்த தாக்குதலில் சரவணகுமார் பரிதாபமாக இறந்து விட, பள்ளிக்கரணை போலீசார் அஜித்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

கிட்டதட்ட ஒரு வருட காலம் சிறையில் இருந்த அஜித்குமார் 25 நாட்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளியே வந்து ஊருக்கு திரும்பி இருக்கிறார்.

என்னதான் சட்டம் அஜித்குமாருக்கு தண்டனை கொடுத்தாலும், சரவணகுமாரின் குடும்பத்தால் நடந்ததை மறக்க முடியவில்லை. நாளுக்கு நாள் அவர்களின் கோவம் குரோதமாக மாறி இருந்த நேரத்தில் தான், அஜித்குமார் ஜாமினில் வெளியே வந்து உல்லாசமாக சுற்றி திரிந்திருக்கிறார்.

எங்கள் வீட்டு பிள்ளையை கொன்று விட்டு நீ எப்படி உயிரோடு இருக்கலாம் என்று வெகுண்டெழுந்த சரவணகுமாரின் மாமா பாலமுருகன் அஜித்குமாருக்கு நாள் குறித்து களத்தில் இறங்கி இருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று கூட்டளிகளுடன் இருட்டில் காத்திருந்த பாலமுருகன், பைக்கில் வந்த அஜித்குமாரை வெட்டி கூறு போட்டிருப்பது விசாரனையில் தெரிய வந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பாலமுருகன், மாரிசெல்வம், ஐயன் ராஜ் ஆகிய முவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்