உல்லாச உறவுக்கு அக்காவுடன் போட்டி.. முந்திக்கொண்டு போட்டு தள்ளிய தங்கை

x

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தங்கையே மூளையாக செயல்பட்டதும், ஒன்றும் தெரியாதது போல், அக்காவின் சடலத்தின் முன்பே குத்தாட்டம் போட்டதும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரியை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

சம்பவம் குறித்து மாம்பலம் போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில், கேங்க் வார் போல... அக்காவுக்கும் தங்கைக்கும் இடையே சிலருடன் தகாத உறவில் இருந்தது குறித்து கடும் போர் இருந்து வந்தது தெரியவந்துள்ளது...

கொலையாளிகளை பிடிப்பதற்காக இதன் பின்னணியை தோண்டிய போலீசாருக்கு பெரும் திருப்பமும், அதிர்ச்சியும் காத்திருந்தது...

சென்னை, மீனம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் ரயில்களில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில், அவ்வப்போது சைதாப்பேட்டை மற்றும் தி.நகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார்...

இவருக்கு நான்கு பேருடன் திருமணமானதாக கூறப்படும் நிலையில், முதல் கணவர் திருட்டு வழக்கில் ஒன்றில் சிக்கி, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதில் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாகவும், மூன்றாவது கணவரை கடந்தாண்டு முன்விரோத பகையால் சிலர் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது...

இந்நிலையில், இரண்டாது கணவர் அபிஷேக்குடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த ராஜேஸ்வரி, சூர்யா என்பவருடனும் தகாத உறவிலும் இருந்து வந்திருக்கிறார்...

இந்நிலையில், ராஜேஸ்வரியின் தங்கையான நாகவல்லி, திண்டிவனத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் தகாத உறவில் இருப்பது தெரியவர, சக்திவேலை எச்சரித்த அவர், தங்கையை அழைத்து கண்டிக்கவும் செய்திருக்கிறார்...

அப்போது, அக்காவும், தங்கையும் மாறி மாறி இருவருடைய தகாத உறவுகள் குறித்து பேசி மோதிக்கொண்ட நிலையில், அது அடிதடி வரை சென்றிருக்கிறது...

இதில், நாகவல்லியின் தரப்பில் சக்திவேலும், உறவினரான ஜெகதீசனும்... ராஜேஸ்வரியிடம் தகாத உறவில் இருந்த சூர்யாவை மிரட்டி கத்தியால் தாக்கியும் உள்ளனர்...

இதனால் கொதித்துபோன ராஜேஸ்வரி போலீசில் புகாரளித்த நிலையில், தங்கையின் மீதும், சக்திவேல் மீதும் கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்...

இந்நிலையில், தனது தகாத உறவுக்கு தொடர்ந்து அக்கா இடையூறாக இருந்து வருவதை எண்ணி கோபத்தில் இருந்த நாகவல்லி, தம்மை போலவே தன்னுடைய அக்காவும் தங்களை எந்நேரத்திலும் தாக்கலாம் என எண்ணி அவரை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்...

இதன்படி காதலன் சக்திவேல், உறவினர் ஜெகதீசன் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அக்காவுடன் சேர்ந்து வியாபரம் செய்யும் இருவரையும் கூட்டு சேர்த்திருக்கிறார்...

திட்டத்தின் படி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தினுள் கடந்த 19ஆம் தேதி புகுந்த நால்வரும், ராஜேஸ்வரியை கொடூரமாக வெட்டி கொன்றது வெளிச்சத்திற்கு வந்தது...

நால்வரும் சதித்திட்டத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய மமதையில் இருந்த நிலையில், அக்காவை கொன்று விட்டு ஏதும் அறியாதது போல் அவரது சடலத்தின் முன்பு இறுதிச்சடங்கில் குத்தாட்டம் ஆடியிருக்கிறார் நாகவல்லி...

இந்நிலையில், தீவிர விசாரணை மூலம் நால்வரையும் நெருங்கிய மாம்பலம் போலீசாரின் தனிப்படை, ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லி, சக்திவேல், உறவினர் ஜெகதீசன் மற்றும் ரயிலில் சமோசா விற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த சூரியா, ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஜான்சன் ஆகிய ஐவரையும் பிடித்து சிறையில் அடைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்