குதிரை பந்தயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் - பலிகடாவான இளம் குதிரை... போலீசார் தீவிர விசாரணை

x

குதிரை பந்தயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் ஆசை ஆசையாய் வாங்கிய இளம் குதிரையை மறுநாளே மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

நம் முன்னோர்கள் காலக்கட்டத்தில், எதிரியை பழிவாங்க நினைக்கும் கும்பல், அவர்கள் தன் உயிரினும் மேலாக எண்ணி வளர்க்கும் கால்நடைகளை கொன்று பழிதீர்த்து கொள்ளும் அதே பாணியில், ஒரு கொடூர கொலை சம்பவம் தற்போது நெல்லையில் அரங்கேறியிருக்கிறது...

இதில், இளம் குதிரை ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

குதிரை பந்தயத்தின் மீது ஆதீத ஆர்வம் கொண்டவர் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த தனுஷ். இவர், நெல்லையில் நடைபெறும் குதிரை பந்தய திருவிழா மூலம் குதிரை பந்தயத்தில் ஈடுபடுவர்களுடன் நட்பு கொண்டு அந்த கும்பலுடனே பயணித்து வந்திருக்கிறார்....

கிட்டதட்ட யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்டிக்கொள்ளாத மற்றும் கையாள்வதில் பெரும் சிக்கலான பிராணிகளின் வகையை சேர்ந்த குதிரைகளுடன் நெருங்கி பழகி வந்த தனுஷ், குதிரை வளர்ப்பின் நுணுக்கங்களை படிப்படியாக கற்றுத் தேர்ந்திருக்கிறார்....

கடைசியில், குதிரைகள் மீது அலாதி பிரியம் ஏற்பட்டு தனக்கென ஒரு குதிரையை வாங்கி வளர்க்க விரும்பிய அவர், 45 ஆயிரம் ரூபாய்க்கு ஆசை ஆசையாய் இளம் குதிரை ஒன்றை வாங்கியிருக்கிறார்...

வாங்கிய குதிரையை விட்டு ஒரு நொடி கூட பிரிந்திராமல் இருந்த தனுஷ், அன்று நள்ளிரவு 12 மணி வரை நண்பர்களுடன் சேர்ந்து குதிரையின் கூடவே இருந்திருக்கிறார்...

12 மணிக்கு மேல் குதிரையை தொழுவத்தில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு சென்ற தனுஷ், மறுநாள் காலையில் குதிரையை பார்ப்பதற்காக தொழுவத்திற்கு வந்த போது, உடலில் தெம்பில்லாமல் மயங்கி கிடந்த குதிரையையும், அதை சுற்றி ரத்த கறைகள் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சியடைந்திருக்கிறார்...

சம்பவமறிந்து வந்த தனுஷின் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் குதிரையை தூக்கிக்கொண்டு நெல்லை அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு குதிரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது...

நள்ளிரவு 12 மணி வரை குதிரையுடன் இருந்த நிலையில், திடீரென குதிரை இந்த நிலைமைக்கு ஆளானதை எண்ணி அதிர்ச்சியும், சந்தேகமும் அடைந்த தனுஷ் போலீசில் புகாரளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து நடத்திய தீவிர விசாரணையில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது...

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பவர், தனுஷை போலவே குதிரை பந்தயத்தில் ஈடுபாடு கொண்டு ஒரு கும்பலுடன் பயணித்து வந்திருக்கிறார்...

அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தனுஷின் நெருங்கிய நண்பரான நிலையில், அவருக்கும் இசக்கி முத்துவிற்கும் தகராறு ஏற்பட்டு நீண்டு நாட்களாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது...

அந்த முன்விரோதம் பெரிதாகவே, இசக்கி முத்து இருக்கும் கும்பலில் இருந்து வெளியே வந்த அவர், தனுஷின் கும்பலுடன் இணைந்திருக்கிறார்...

அவர் இணைந்த சில நாட்களில்தான் தனுஷ் புதியதாக குதிரை ஒன்றை வாங்கிய நிலையில், அந்த குதிரையை வைத்துக்கொண்டு இருவரும் நகரில் கெத்து காட்டியிருக்கின்றனர்...

இதைக்கண்டு ஆத்திரமும், ஆதங்கமும் அடைந்த இசக்கி முத்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து குதிரை கட்டி வைத்திருந்த தொழுவத்திற்கு மதுபோதையில் நள்ளிரவில் வந்த நிலையில், குதிரையை கத்தியால் குத்தி கொன்று தப்பிச்சென்றது தெரியவந்தது..

இந்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இசக்கி முத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இதில் தொடர்புடைய அவரது நண்பர்களுக்கும் வலை விரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்