பரபரப்பான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் - சப் இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேருக்கு நேர்ந்த கதி

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே, பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக மோதியதில், காவல் உதவி ஆய்வாளர், பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே, வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அன்புதாசன் உட்பட காவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த காரை, காவலர்கள் நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், உதவி ஆய்வாளர் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்கள் உட்பட 7 பேர் மீது மோதிவிட்டு, கம்பத்தில் மோதி நின்றது. பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன் என்பதும், குடும்பத்துடன் திருத்தணி கோயிலுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. பின்னர் கார் ஓட்டுநர் மோகனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்