நடுரோட்டில் முற்றிய தகராறு... மனைவியை கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்த 'காதல்' கணவன் - நெல்லையை அதிர வைத்த சம்பவம்

x

திருநெல்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியரை கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்கிற அக்பர் இப்ராஹிம். இவருடைய மனைவி அய்யம்மாள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வந்தனர். அய்யம்மாளுடன் இரண்டு மகன்களும், பாலசுப்பிரமணியனுடன் ஒரு மகனும் தங்கி இருந்தனர். அய்யம்மாள் பணி நிமித்தமாக, மருத்துவமனை அருகே அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

இந்த நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அய்யம்மாளை வழிமறித்த கணவர் பாலசுப்பிரமணியன், அவருடன் தகராறு செய்துள்ளார். அண்ணா நகரில் முக்கிய சாலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, வாக்குவாதம் முற்றியதால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பாலசுப்பிரமணியன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யம்மாளை சரமாரியாக குத்தியுள்ளார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை போலீசாரும், திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் சீனிவாசனும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அய்யம்மாளை அவருடைய கணவரே கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அய்யம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக, அவர் பணிபுரிந்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கே சடலமாக‌ அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, தலைமறைவான பாலசுப்பிரமணியனை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்