தர்பூசணி வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்பு துறையினர் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தோட்டக்கலை துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்துள்ள மனுவை எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.