Tasmac | ED| ``இது ஒண்ணும் தவறுதலா நடந்த மாறி தெரியலயே’’ - டாஸ்மாக் வழக்கில் வறுத்தெடுத்த ஐகோர்ட்

Update: 2025-07-24 03:35 GMT

டாஸ்மாக் வழக்கு.. ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் - அமலாக்கத்துறைக்கு கண்டனம்


நீதிமன்ற உத்தரவை மீறி, ஆவணங்கள் தொடர்பாக பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி, சம்மன் எப்படி அனுப்பப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு, வேண்டுமென்றே உத்தரவு மீறப்படவில்லை. தவறுதலாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இது தவறுதலாக நடந்ததாக தெரியவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கில், நீதிமன்றம் ஒரு ஆவணத்தை கேட்ட போது காலம் தாழ்த்திய அமலாக்கத் துறை, இப்போது ஏன் சம்மன் அனுப்பியது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், விருப்பப்பட்டால் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்