"எனது X, FB கணக்குகள் அன்புமணி ஆதரவாளர்களால் முடக்கம்" - ராமதாஸ் புகார்
தனது சமூக வலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில், தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதள கணக்குகளின் கடவுச்சொற்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த கடவுச்சொற்களை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. ராமதாஸ் கடந்த மே 28ம் தேதியன்று, எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு செய்துள்ளதாகவும், அதன் பிறகு அவரது சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடகங்களுக்கு அறிக்கைகள் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்த முடியவில்லை என்றும், சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.