நடுங்கும் குரலில் போனில் பேசிய மகன் - பதறியடித்து ஓடி சென்ற அப்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2022-08-11 05:03 GMT

நண்பர்களிடம் வாங்கிய கடனுக்காக, தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மகன் கடத்தல் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜன் நகரைச் சேர்ந்த இசக்கி முத்து மகன் வேல்ராஜ், தந்தையுடன் சேர்ந்து தச்சு வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்த வேல்ராஜ், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதைத் தொடர்ந்து, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துக் கொண்டு 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக தனது தந்தைக்கு வேல்ராஜ் தகவல் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்படி, வேல்ராஜின் செல்போன் காட்டிய இடத்துக்குச் சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு வேல்ராஜுடன் மேலும் இரண்டு பேர் இருந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நண்பர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேல்ராஜ் கடத்தல் நாடகமாடியது தெரிய வந்தது.

இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்