"மத வெறுப்பு பேச்சு.." அண்ணாமலையை சுற்றும் வழக்கு... நாள் குறித்த உச்சநீதிமன்றம்

Update: 2024-04-29 11:18 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை, தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். இது இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில் சம்மனையும் வழக்கையும் ரத்து செய்யக் கோரி அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்