வெப்ப வடிவில் புகுந்த எமன்.. இந்த அறிகுறி இருந்தால் மரணம்? - எல் நினோவால் வீசும் காற்றும் தீயாய் மாறும்

Update: 2024-04-23 07:52 GMT

ஐரோப்பிய ஒன்றியத்தில் அதீத வெயிலினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கால நிலை மாற்றம் காரணமாக கடந்த பல வருடங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது...குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது....

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிக்கஸ் பருவநிலை கண்காணிப்பு மையமும், உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதில், ஐரோப்பாவில் வெப்ப அலைகளின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெப்பத்தினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அந்த வகையில் கடந்த 20 வருடங்களில் வெயில் மரணங்கள் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலில், திறந்த வெளிகளில் பணி புரிபவர்கள், முதியவர்கள், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர் அதீத வெப்பத்தினால் அதிக பாதிப்புக்கு ஆளாவதாக கூறப்பட்டுள்ளது.

2023-ல் வெப்ப அலைகளினால் தெற்கு ஐரோப்பாவின் 41 சதவீத பகுதிகளில் அதீத வெப்ப பாதிப்புகள் ஏற்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு முன்பு ஐரோப்பாவில் இவ்வளவு பெரிய பரப்பளவில் வெப்ப பாதிப்பு ஏற்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புவிவெப்பமயமாதலில் ஐரோப்பா கண்டம் முதலிடத்தில் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2023-ஆம் ஆண்டு ஜூலையில் இத்தாலியின் சில பகுதிகளில் அதீத வெப்பத்தினால் ஏற்படும் மரணங்கள் 7 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் நாடுகள், பத்து நாட்கள் வரை அதீத வெப்ப பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததாகவும், ஒரு சில பகுதிகளில் 46 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளதை போன்ற உணர்வு ஏற்பட்டதாக AFP செய்திக் குறிப்பு கூறியிருந்தது.

பசுமை குடில் வாயு வெளியேற்றம் மற்றும் எல் நினோ பாதிப்புகள் காரணமாக அதீத வெப்ப தாக்கம் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்