"இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபடும் சிறுவர்கள்" "குற்றவாளிகளாக முத்திரை குத்துவதை தவிர்க்கவும்" - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Update: 2024-03-19 23:45 GMT

இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக முத்திரை குத்துவதை விடுத்து, அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசத்தில் ஈடுபட்டு, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கை குறித்து காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, அவர்களை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்