நீட் தேர்வு- 16 வயது மாணவிக்கு அனுமதி மறுப்பு
16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 வயது மாணவி நீட் தேர்வெழுத அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து தேசிய தேர்வு முகமை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையில் ஆஜரான, தேசிய தேர்வு முகமை வழக்கறிஞர், நீட் தேர்வெழுத 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்று விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தனி நீதிபதி கணக்கில் கொள்ள மறுத்து விட்டதாகவும்,
இது போன்ற கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார்.
மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவியின் அறிவுத்திறனை கணக்கில் கொண்டு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒருவருக்கு நல்ல அரசியல் புரிதல் இருக்கிறது என்பதற்காக 18 வயது பூர்த்தி அடையாமல் அவரை வாக்களிக்க அனுமதிக்க முடியுமா என கேள்வி எழுப்பினர்
சம்பந்தப்பட்ட மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதன் தாக்கம் அவரை மன ரீதியாகப் பாதிக்கும் என தெரிவித்து, 16 வயது மாணவி, நீட் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.