அண்ணனின் காதலுக்காக கொலையாளி ஆன தம்பி

ராணிப்பேட்டை அருகே தன் அண்ணனின் காதலுக்காக இளைஞர் ஒருவர் கொலையாளி ஆகி இருப்பது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Update: 2021-01-08 09:30 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள முப்பது வெட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்.  இவரின் மகன் சூர்யா. டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை முடித்துவிட்டு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை ஓரமாக சூர்யா உடலில் கத்தி காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே சூர்யாவை மீட்டு ஆற்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, இந்த தகவல் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சூர்யா காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணும் சூர்யாவை விரும்பி வந்ததை தொடர்ந்து இவர்களின் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிரச்சினையும் நடந்துள்ளது. ஏற்கனவே அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் அவரின் அத்தை மகன் சுதாகர். தன் அண்ணன் காதலிக்கும் அத்தை மகள் வேறு ஒருவரை காதலிப்பதால்  சூர்யாவின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் சுதாகரின் தம்பி அஜய். மேலும் தன் அண்ணன் சுதாகரை காதலிக்குமாறும் தன் முறைப்பெண்ணிடம் கூறியிருக்கிறார் அஜய். தன் முறைப்பெண்ணுடனான காதலை கைவிடுமாறு  பலமுறை எச்சரித்தும் 2 பேரும்  காதலை கைவிடாததால் சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அஜய். சூர்யா தன் வீட்டில் இருந்து வெளியே வருவதை அறிந்த அஜய், அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சூர்யா உயிரிழந்ததை தொடர்ந்து அஜயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்