பெற்ற குழந்தையை கொடூரமாக கழுத்தை நெறிக்கும் தாய் - பார்ப்போரை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்

பெற்ற குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்க்கும் தாய்க்கு மத்தியில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தாய் தன் பிள்ளைக்கு செய்த கொடூர செயல் காண்போரை குலைநடுங்க வைக்கிறது...

Update: 2020-12-29 11:36 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொட்டும் பனியில் 5 வயதான சிறுவன் புதர் ஒன்றில் படுத்துக்கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் பதறிப்போய் அவனை மீட்டனர். பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன், தன் தாய் குறித்தும் தந்தை குறித்தும் தெளிவாக கூறவே, அவர்கள் சிறுவனை  பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் சிறுவனோ தன் தாயை பார்த்து பதறித்துடித்து போகவே அதிர்ச்சியடைந்த போலீசார் அவனை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு திரும்பினர். சிறுவனுக்கு என்ன நடந்தது? எதனால் அவன் தன் தாயை பார்த்து பதறுகிறான்? என விசாரணை நடத்தி வந்த நிலையில் தான் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி பார்ப்போரை பதற வைத்தது. போலீசாரால் மீட்கப்பட்ட சிறுவனின் கழுத்தை கொடூரமாக நெறிப்பது வேறு யாருமில்லை. அவரின் தாய் சித்ரா தான். கூலித் தொழிலாளியான ஆனந்த் என்பவரின் மனைவி தான் சித்ரா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் சித்ரா, தன் ஆண் நண்பருடன் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார். அப்போது திடீரென தன் குழந்தை மீது ஏற்பட்ட வெறுப்பால் அதை கொடூரமாக கழுத்தை நெறித்து கொல்ல முயன்றது தெரியவந்தது. இந்த வீடியோவை எடுத்தது சித்ராவின் ஆண் நண்பரே. இதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவே வீடியோ எடுத்ததாக கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார் அவர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கள் வீட்டில் தீ விபத்து நடந்ததாக கூறி 60 சதவீத தீக்காயங்களுடன் தன் முதல் குழந்தையை அழைத்து வந்துள்ளார் சித்ரா. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் தான் 2வது குழந்தைக்கும் இந்த கொடூரம் நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக தப்பிய அந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தையின் தாய் சித்ராவுக்கு பல பேருடன் தொடர்பு இருந்ததும் அம்பலத்திற்கு வந்தது. இப்போது புது ஆண் நண்பருடன் வாழ்க்கையை தொடங்கிய சித்ராவிற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததாக தெரிகிறது. குழந்தைகள் இரண்டையும் ஒழித்துவிட்டு வந்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என புது காதலன் கூறியதை நம்பி தன் முதல் குழந்தையை நெருப்பு வைத்துக் கொன்றுள்ளார் சித்ரா. இப்போது 2வது குழந்தையையும் கொல்ல முயன்ற சித்ரா இப்போது போலீசார் வசம் சிக்கியிருக்கிறார். ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்வதால் அவரை காப்பகத்தில் போலீசார் வைத்துள்ளனர். இதனிடையே வீடியோவை எடுத்த சித்ராவின் காதலனையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். சில மனிதர்கள், சில தவறுகளால் பாதிக்கப்படுவது என்னமோ பிள்ளைகள் தான். பாதிக்கப்பட்ட இந்த சிறுவனின் மனநிலை இப்போது என்னவாக இருக்கும்? தாயை பார்த்து பயந்து ஒதுங்கும் குழந்தைக்கு இப்போதைக்கு தேவை ஆதரவான பேச்சும், அன்பும் மட்டுமே... சிறுவனை மனதளவில் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதே குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்