மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் சேர உத்தரவு
மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்து இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில்
இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்கள், தேர்வு செய்த கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்திருப்பதால் கலந்தாய்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளையே எப்படி கல்லூரிகளில் சேர முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் வரும் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு
விசாரணைக்கு வருவதால், அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.