மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்க கூடாது - அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை கண்டிப்பான உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக தலைமையாசிரியர்கள் எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
பல்வேறு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் கேட்கும் பாடப்பிரிவு தர முடியும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இது தொடர்பாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர், ஒரு மாணவனின் தாயாரிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் கேட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா இன்று நேரடியாக ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.